இங்க கூடவாய்யா திருடுவீங்க.. திமுக தொண்டர்கள் கூட்டத்தில் பிக் பாக்கெட்.. காவிரி முன்பு பரபரப்பு!
காவிரி மருத்துவமனை முன்பு திரண்ட கூட்டத்தில் திருடன் புகுந்தான்.
சென்னை: காவேரி மருத்துவமனை முன்பு திரண்டிருந்த தொண்டர்கள் கூட்டத்தில் திருடன் ஒருவன் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நேற்று மாலை திடீர் பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின் மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப்பின் உடல்நிலை சீராகி வருகிறது. மருத்துவக்குழுக்கள் கருணாநிதியை கண்காணித்து வருவதுடன், தொடர் சிகிச்சையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிய மருத்துவமனை வந்தனர்.
அதேபோல, நடிகர் சிவகுமார், அவரது மகன் சூர்யா ஆகியோர் மருத்துவமனை சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். இதைதவிர மருத்துவமனை வாயிலில் தொண்டர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து கட்சியின் தொண்டர்கள் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திருடன் ஒருவன் இந்த கூட்டத்திற்குள் திடீரென புகுந்தான். கருணாநிதி உடல் நலம் பெற வேண்டும் உணர்ச்சி பெருக்கில் அழுதவாறும், பதட்டத்திலும் நின்று கொண்டிருந்தவர்களிடம் திருடுவதற்கு முற்பட்டான். இதனை கவனித்த அங்கிருந்த தொண்டர்கள் பிக்பாக்கெட் திருடனை பிடித்து அங்கிருந்த பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொண்டர்கள் கூட்டத்திற்குள் திருடன் ஒருவன் புகுந்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.