பச்சமுத்து, ஏ.சி.சண்முகத்தை வேட்பாளர் பட்டியலிருந்து நீக்க கோரி வழக்கு!
சென்னை: பா.ஜ.க. வேட்பாளர்கள் பச்சமுத்து, ஏ.சி.சண்முகம் ஆகியோரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மக்கள் மாநாட்டுக் கட்சியின் செயலாளர் கே.பி.சதீஷ்குமார் தாக்கல் செய்த மனுவில், கூறியுள்ளதாவது:
"அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும், பதிவு செய்யப்பட்ட கட்சிகளும், தேர்தல் பிரசாரத்துக்காகக் கொடுக்கும் நட்சத்திர பேச்சாளர்களின் பெயர்ப் பட்டியல் தேர்தல் கமிஷனால் அனுமதிக்கப்படுகிறது.
இந்த நட்சத்திரப் பேச்சாளர்களைக் கொண்டுள்ள சில கட்சிகள், தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் மற்ற கட்சிகளுக்காக அவை பிரசாரத்தில் ஈடுபடுகின்றன.
இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் இந்திய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பச்சமுத்து, புதிய நீதிக் கட்சியைச் சேர்ந்த ஏ.சி.சண்முகம் ஆகியோர் முறையே அந்தக் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளராக அனுமதி பெற்று, பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுகின்றனர்.
இது தேர்தல் விதிகளுக்கு முரணான செயலாக உள்ளது. தேர்தல் கமிஷன் கொடுக்கும் உரிமைகள் மீறப்பட்டு, மோசடி செய்யப்படுவதாகவே தெரிகிறது. இதை அனுமதித்தால், சில கட்சிகளுக்கு ஏராளமான நட்சத்திர பேச்சாளர்கள் சேர்ந்துவிடக்கூடும். எனவே தேர்தல் கமிஷனின் விதிகளை மீறிய பச்சமுத்து மற்றும் ஏ.சி.சண்முகத்தை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.