ஜெ.வின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதை எதிர்த்து ஹைகோர்ட்டில் வழக்கு
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக்குவதில் தமிழக அரசு மும்முரமாக இருக்கிறது. இதற்கு தினகரன் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தினகரன் தரப்பு வாதம்
நீதிமன்றங்களில் நடைபெற்ற வழக்குகளில் சசிகலா, இளவரசி ஆகியோரின் முகவரியும் வேதா இல்லம்தான். அவர்கள் சிறையில் உள்ள நிலையில் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்க முடியாது என்பது தினகரன் தரப்பு வாதம்.
ஹைகோர்ட்டில் வழக்கு
இந்த நிலையில் திருச்சி முசிறியைச் சேர்ந்த பொறியாளர் தங்கவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளார். அம்மனுவில் தங்கவேலு கூறியுள்ளதாவது:
தண்டிக்கப்பட்ட குற்றவாளி
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி.
அறிவிப்பை ரத்து செய்க
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக்குவது சட்டவிரோதமானது. இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.