தனியார் பாலில் ரசாயனக் கலப்பா?.. சிபிஐ விசாரணை கோரி ஹைகோர்ட்டில் மனு!
தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சென்னை ஹைகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்பதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தொடரப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் பாலில் 100 சதவீதம் ரசாயன கலப்படம் செய்வதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே கடந்த வாரம் போட்டு உடைத்தார். இதனை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்க மத்திய அரசின் சோதனைக் கூடங்களுக்கு பால் பாக்கெட் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஆய்வின் முடிவு படி தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் தனியார் பாலில் ரசாயனம் கலப்பது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பாலில் கலப்படம் என்று அரசே கூறுவது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கலப்படம் செய்வதாகக் கூறும் அரசு, நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது ஏன் என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.
பாலில் கலப்படம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை என்றும் மனுதாரர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் அடுத்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு வருகிறது. அப்போது அரசு தரப்பும் தங்களிடம் உள்ள ஆதாரங்களை ஒப்படைக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.