சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட எதிர்ப்பு: பொதுநல மனு தள்ளுபடி
சென்னை: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசின் சுற்றறிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வழக்கறிஞர் பி.புகழேந்தி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், நாட்டில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களிலும், சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், சமஸ்கிருதம் மொழி, பிற மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி என்ற பொய்யான தகவல்களை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றனர்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம், 8-வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளில் சமஸ்கிருதமும் ஒரு மொழியாகத்தான் உள்ளது. அதற்கு என்று சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே, மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு புதன்கிழமை முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி, ‘சமஸ்கிருதம் மொழியை 14 ஆயிரம் பேர்தான் பேசுகின்றனர். இந்த மொழி பிற மொழிக்கு எல்லாம் தாய் மொழி என்று கூறமுடியாது. இந்த மொழியை மட்டும் வளர்ப்பதற்கு மத்திய அரசு பெரும் தொகையை செலவு செய்வது என்பதை ஏற்கமுடியாது' என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சி.பி.எஸ்.இ. கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை மனுதாரர் தவறாக புரிந்துகொண்டுள்ளார். அந்த சுற்றறிக்கையில், சமஸ்கிருதம் மொழியை ஊக்குவிக்கும் விதமாக ஒரு வார நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், பிற மொழிகளை ஊக்குவிக்கப்படாது என்று அர்த்தமில்லை. உதாரணத்துக்கு தமிழ் மொழிக்கு உள்ள செழுமையை குலைக்கப்படும் என்ற அர்த்தமும் இல்லை. சமஸ்கிருதம் மொழியை கற்கவும், கற்பிக்கவும் ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
சமஸ்கிருதம் மொழியை பரிசார்த்த முறையில் ஊக்குவிக்கும் விதமான இந்த திட்டத்தில் நீதித்துறை தலையிட விரும்பவில்லை. எனவே, இந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.