கல்பாக்கம் அணுமின் நிலையத்தை மூடக் கோரும் வழக்கில் ஹைகோர்ட் நோட்டீஸ்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் ஒரு பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கல்பாக்கம் அணுமின் நிலையமானது உரிய சுற்றுச் சூழல் அனுமதியின்றி கடந்த 30 ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது. கல்பாக்கம் அருகே கடலுக்குள் எரிமலை குமுறிக் கொண்டிருக்கிறது என்று சர்வதேச அணு சக்தி கழகம், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு ஆகியவை சுட்டிக்காட்டியுள்ளன.
கல்பாக்கம் அணுமின் நிலையம் செயல்பட தொடங்கிய காலத்தில் இருந்தே புற்றுநோய் உள்ளிட்ட நோயால் இப்பகுதியில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த காரணங்களால் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வா, நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.