ஜெ. மரணத்தில் சந்தேகம்: சிபிஐ விசாரிக்க கோரி சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரிக்கை எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக பொதுநலன் வழக்கும் போடப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் சிபிஐ விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த தமிழ்நாடு தெலுகு யுவ சக்தி என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் இன்று பொதுநலன் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.
அதில், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது; ஆகையால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் அனைத்தையும் அப்பல்லோ மருத்துவமனையிடம் இருந்து பெற வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா, நடிகை கவுதமி ஆகியோர் சந்தேகம் எழுப்பியிருந்தனர். இந்த நிலையில் இந்த பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.