“பைப் லைன்” கசிவுதான் சொட்டு நீர் பாசனத்துக்கு வழி காட்டியது... இஸ்ரேல் தூதர்
ஓசூர்: சாதாரண குடிநீர் குழாய் கசிவு தான் சொட்டு நீர் பாசனத்துக்கு வழி காட்டியதாக தென்னிந்தியாவிற்கான இஸ்ரேல் நாட்டு துணைத் தூதர் மேனகம் கனாபி தெரிவித்துள்ளார்.
ஓசூர் காமராஜர் காலனியில் உள்ள, ஆந்திர சமிதியில் நடந்த வேளாண்மைத்துறை சம்பந்தமான கருத்தரங்கில் தென்னிந்தியாவிற்கான இஸ்ரேல் நாட்டு துணைத் தூதர் மேனகம் கனாபி கலந்துகொண்டு நவீன வேளாண் தொழில் நுட்பம் பற்றி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இஸ்ரேல் நாட்டின் பாதி நிலம் பாலைவனமாகவும், மீதி பாதி நிலம் சதுப்பு நிலமாகவும் உள்ளது. இதனால், விவசாயம் மூலம் எங்கள் நாட்டு மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் கிடைக்கவில்லை. அதற்காக நாங்கள் கடல்வாழ் உயிரினங்களை சார்ந்து வாழ வேண்டியிருந்தது.
இந் நிலையில், 1930-ம் ஆண்டு, ஒரு விவசாயி தற்செயலாக தன்னுடைய நிலத்தின் ஓரிடத்தில் பார்த்த போது, முற்றிலும் வரண்டு போயிருந்த பகுதியில் ஓரிடத்தில் மட்டுமே நிலத்தில் ஈரம் இருந்துள்ளது.
அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது, பூமிக்கு அடியில் இருந்த குடிநீர் கொண்டு செல்லும் பைப் லைன் சேதமாகி தண்ணீர் சொட்டு சொட்டாக கசிந்து கொண்டிருந்தது. இந்த முறைதான், பிற்காலத்தில் சொட்டு நீர் பாசனமாக மாறியது. இன்று உலக நாடுகள் எல்லாமே சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்துகிறது.
இந்தியாவில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 30-சதவிகிதம் வீனாகிறது. இதற்கு, விலை வீழ்ச்சி, பாதுகாப்பு வசத்கள் இல்லாததது, நோய் தாக்குதல் போன்ற பல காரணங்கள் உள்ளது. ஒரு காலத்தில் இஸ்ரேலும் இப்படிப்பட்ட நிலையில் தான் இருந்தது, ஆனால், நவீன தொழில் நுட்பம், பாதுகாப்பு முறைகள் மூலம் இப்போது மொத்த உற்பத்தியில் மூன்று சதவிகிதம் மட்டுமே வீணாகிறது.
இத்தியா-இஸ்ரேல் கூட்டு முயற்சியில் நடைபெறும் இந்த கருத்தரங்கம் மூலம், அறுவடை, விவசாய உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் கழிவுகள் இன்றி விவசாயம் செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்' என்றார்.