துப்பாக்கியும், தோட்டாவுமாக மதுரைக்குக் கிளம்பிய மாஜி திமுக எம்.பி.. சென்னை ஏர்போர்ட்டில் சிக்கினார்
சென்னை: 8 தோட்டாக்களும், பிஸ்டலுமாக சென்னையிலிருந்து மதுரை செல்வதற்காக விமான நிலையம் வந்த முன்னாள் திமுக எம்.பி. எஸ்.ஆர். ஜெயதுரை சென்னை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திப்பட்டார்.
துப்பாக்கி மற்றும் தோடாக்களைப் பறிமுதல் செய்த பின்னரே அதிகாரிகள் அவரை மதுரைக்குக் கிளம்ப அனுமதித்தனர்.
தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பியாக இருந்தவர் ஜெயதுரை. இவர் இன்றஉ காலை மதுரை செல்வதற்காக தனியார் விமானத்தில் ஏறுவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவரை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் சோதனை போட்டனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் எட்டு தோட்டாக்களுடன் ஒரு பிஸ்டல் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து விமான விதிப்படி இவற்றை எடுத்துச் செல்ல முடியாது என்று அதிகாரிகள் கூறி விட்டனர். மேலும் ஆயுதம் கொண்டு வருவது தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறி அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இதனால் கோபமடைந்தஜெயதுரை, அவர்களுடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டார். தான் உரிமம் பெற்றே துப்பாக் வைத்துள்ளதாக கூறிய அவர் தன்னுடன் அதை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறும் கோரினார். ஆனால் அதிகாரிகள் பிடிவாதமாக முடியாது என்று கூறி விட்டனர்.
இதையடுத்து அந்தத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை தனது உறவினர் ஒருவரிடம் வாங்கி ஒப்படைத்தார் ஜெயதுரை. இதையடுத்தே அவரை பயணம் செய்ய அதிகாரிகள் அனுமதித்தனர்.
இருப்பினும் அவர் பயணம் செய்யவிருந்த விமானம் கிளம்பிப் போய் விட்டதால் அடுத்த விமானத்தில் செல்ல முடிவு செய்தார் ஜெயதுரை.