சுரேஷ் பிரபு விலகல் எதிரொலி.. பியூஷ் கோயலுக்கு ரயில்வே!
ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு விலகியதைத் டர்ந்து அந்த துறையானது பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டது.
டெல்லி: தொடர் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ்பிரபு ராஜினாமா செய்ததை தொடர்ந்து அத்துறை கேபினட் அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்ட பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டது.
ரயில்வே துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ் பிரபு. இவரது பதவி காலத்தில் உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் உத்கல் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 23 உயிர்கள் பறிபோனது.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் அலிகார் அருகே மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் ரயில்வே அமைச்சகம் மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த ஆக.23-ஆம் தேதி தமிழகத்தில் விழுப்புரம் அருகே டிராக்டர் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
எனவே அடுத்தடுத்து 3 ரயில் விபத்துகள் நடந்ததால் இதற்கு பொறுப்பேற்று சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்தார். எனினும் பிரதமர் மோடி அமைதி காக்குமாறு கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சரவை இன்று மூன்றாவது முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. அதில் பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்பட 4 பேர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். மேலும் 9 பேர் புதியவர்களும் பதவியேற்று கொண்டனர்.
Congrats to @dpradhanbjp @PiyushGoyal @nsitharaman @naqvimukhtar for their new responsibilities Best wishes for great success
— Suresh Prabhu (@sureshpprabhu) September 3, 2017
இந்நிலையில் சுரேஷ் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் 13 லட்சம் ரயில்வே துறை குடும்பத்தினருக்கு நன்றி என டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் அவர் அப்பதவியை வகிக்க மாட்டார் என தெரிந்தது.
அதன்படி ரயில்வே துறையானது பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுரேஷ் பிரபு புதிதாக பதவியேற்றுக் கொண்டவர்களுக்கு தனது டுவிட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் பிரபுவுக்கு சுற்றுச்சூழல் துறை வழங்கப்படும் என தெரிகிறது.