வைரமுத்துவை ஆபாசமாக விமர்சித்த சீடர்கள்.. ஹைகோர்ட்டில் நித்திக்கு எதிரான வழக்கு முடிவு இதுதான்!
பியூஷ் மானுஷ் புகார் தொடர்பாக ஆதாரம் இல்லை என தமிழக அரசு கூறியதை தொடர்ந்து நித்தியானந்தாவின் முன்ஜாமின் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
சென்னை: பியூஷ் மானுஷ் தொடர்பாக புகார் ஆதாரம் இல்லை என தமிழக அரசு கூறியதை தொடர்ந்து நித்தியானந்தாவின் முன்ஜாமின் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து நித்தியானந்தாவின் சீடர்கள் முகநூல் பக்கத்தில் வைரமுத்துவை ஆபாசமாக பேசி விமர்சித்திருந்தனர்.
தங்களை நித்தியானந்தாவின் சிஷ்யைகள், நித்தியானந்த மடத்தின் இளவரசிகள், யுவராணிகள் என கூறி ஏராளமான சிறுமிகள் ஆபாச விமர்சனங்களுடன் கூடிய வீடியோக்களை வெளியிட்டனர்.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பரப்பியதாக நித்தியானந்தா மீது சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் புகார் அளித்திருந்தார். பியூஷ் மானுஷ் புகாரை அடுத்து நித்தியானந்தா மீது சேலம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.
ஆபாச கருத்துகளை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நித்தியானந்தா ஆபாச கருத்துகளை பரப்பியதாக எந்த ஆதாரமும் இல்லை என தமிழக அரசு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நித்தியானந்தாவின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
தமிழக அரசு ஆதாரம் இல்லை என கூறியதால் நித்தியானந்தா கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார். சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து நித்தியானந்தாவின் சீடர்கள் தங்களின் ஆபாச பேச்சு அடங்கிய வீடியோக்களை நீக்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.