ரூடாக நடந்து கொண்டது உண்மைதான்... பெண் வக்கீல் கிருபாவிடம் மன்னிப்பு கோரிய பியூஷ் மனுஷ்
சென்னை: சமூக சேவகர் பியூஸ் மனுஷ், பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர் பியூஷ் மனுஷ். சேலத்தில் வசித்து வரும் அவர் சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏரிகளை புனரமைக்கும் அருமையான பணியைச் செய்து வருகிறார். இதற்காக அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி மனுஷின் குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் மேம்பாலப் பணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாக கூறி அவரை போலீஸார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் பேஸ்புக்கில் வழக்கறிஞர் கிருபா முனுசாமி என்பவர் மனுஷ் குறித்து போட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
மனுஷ் குறித்த பரபரப்பு
மனுஷை எல்லோரும் மிகப் பெரிய சூழலியல் போராளி என்பது போல பேசி வருகின்றனர். ஆனால் அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என்று கூறி அவர் போட்டிருந்த விரிவான பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. (/news/tamilnadu/voice-against-piyush-manush-258438.html)
ஹரிபிரசாத்தின் வெறித்தனம்
ஆனால் அந்தப் பதிவுக்கு ஹரிபிரசாத் என்பவர் போட்ட பதில்தான் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கிருபாவை தீய்ந்து போன மூஞ்சி என்று இனவெறியுடன் பதிவிட்டிருந்தார் ஹரிபிரசாத். இது பெரும் விவாதத்தையும், கடும் எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியது. ஹரி பிரசாத்துக்கு கடும் பதிலடி கொடுத்து பதிவுகளும் வந்து கொண்டிருந்தன.
பேட்டி கொடுத்த மனுஷ்
இந்த நிலையில் புதிய தலைமுறை டிவிக்கு பியூஷ் மனுஷ் அளித்த பேட்டியின்போது இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த மனுஷ், நான் எப்போதும் கோபப்டுவதில்லை. சில நேரங்களில் கோபப்பட்டு விடுகிறேன். என்னைச் சுற்றி நிறைய நடக்கிறது. அதனால் கோபப்பட்டு விடுகிறேன்.
கிருபாவிடம் மன்னிப்பு
சம்பந்தப்பட்ட பெண்ணும் கூட என்னிடம் வேலை பார்த்தவர்தான். ஆனால் ஏன் இப்போது கூறுகிறார் என்றுதான் தெரியவில்லை. அவரிடமும் கூட நான் ரூடாக நடந்து கொண்டிருக்கிறேன். நான் செய்திருக்க்க கூடாது. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எப்போதுமே அதை நான் மறுக்க மாட்டேன். அவர் வழக்கறிஞர், மிகவும் உறுதியானவர். அப்போதே அதுகுறித்து அவர் பேசியிருக்கலாம். ஒருத்தர், ரெண்டு பேரை நான் புண்படுத்தியிருக்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியுள்ளார் மனுஷ்.
கிருபா முனுசாமி - மகிழ்ச்சி!
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கிருபா முனுசாமி, புதிய தலைமுறை அக்னிப் பரீட்சை பார்த்தவர்களுக்கு உண்மை தெரிந்திருக்கும். புரியாத முட்டாள்கள் பற்றி எனக்குக் கவலையில்லை என்றும் feeling மகிழ்ச்சி என்றும் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.