அமலை செடிகள் ஆக்கிரமிப்பு எதிரொலி.. சுவை மாறும் குடிநீரால் பொதுமக்கள் தவிப்பு
அமலை செடிகள் ஆக்கிரமிப்பால் செய்து வருவதால் குடிநீரின் சுவை மாறி வருவதால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தூத்துக்குடி: அமலை செடிகள் தேங்கியதால் குடிநீர் சுவை மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணையில் வடகால், தென்கால் பாசன வாய்க்கால்கள் மூலமாக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த ஆண்டு தமிழகத்தில் பருவமழை பொய்து போனதால் தாமிரபரணி ஆற்றில் போதுமான அளவு நீர்வரத்து இல்லாத நிலை ஏற்பட்டு பாபநாசம் அணை வறண்டு போனது.
ஆற்றில் தண்ணீர் இல்லாததால் இந்தாண்டு நெல் சாகுபடி இல்லாமல் போனது. கடந்த சில நாட்களாக ஸ்ரீவைகுண்டம் அணையில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பு இருந்து வந்த நிலையில் குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஸ்ரீவைகுண்டம் அணை முழுமையாக நிரம்பி காட்சியளிக்கிறது.
ஆனால், அதே நேரத்தில் ஆற்றில் அடித்து வரப்படும் அமலை செடிகளும் ஆற்றில் நீண்ட தூரம் பரவி கிடக்கிறது. இதனால் மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு தண்ணீர் நிறமும் மாறி தூர் நாற்றம் வீசுவதால் மக்கள் அதை குடிநீராக பருக முடியாத அவலம் நீடித்து வருகிறது. இதில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.