”விதைக்கப்பட்ட மாமனிதனுக்காக வீட்டுக்கொரு மரம் நடுவோம்” - பொதுமக்களுக்கு ஒரு கோரிக்கை!
புதுகை: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பேரணிகளும், அஞ்சலிக் கூட்டங்களும் நடைபெற்ற நிலையில் புதுக்கோட்டையில் அவரது உருவம் தத்ரூபமாக வரையப்பட்டு அவருக்கு ஓவியாஞ்சலி நடைபெற்றது. இந்நிலையில் வீட்டுக்கொரு மரம் நடுதலே அவருக்கான உண்மையான அஞ்சலி என்ற செய்தியும் அனைவரிடமும் பரவி வருகின்றது.
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான அப்துல் கலாம் அவர்கள் மேகாலயாவின் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கிடையே பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கலாம், அங்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவை அனுசரிக்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம், புளிச்சங்காடு கைகாட்டியில் ஓவியர் சேரனால் வரையப்பட்ட அப்துல் கலாம் ஓவியத்திற்கு பொதுமக்களும் அந்த வழியாக சென்ற பயணிகளும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில் கலாம் அவர்களின் இன்றைய நல்லடக்க தினத்தினை நினைவு கூறும் வகையில், விதைக்கப்பட்டார் கலாம் என்பதற்கேற்ப ஒவ்வொரு வீட்டிலும் ஒரு செடியை நட்டு அதனைப் பராமரித்து, அவருடைய ஒவ்வொரு நினைவு தினத்திலும் அச்செடியின் வளர்ச்சிக்கு அடிகோலினால் அதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்றும் இளைஞர்களுக்கிடையே பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.