தமிழக இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் சேவை நிறுத்தம்... எதுக்கு தெரியுமா?
தமிழகம் முழுவதும் இணையதள சேவை மையங்களில் வழங்கப்பட்டு வந்த ஆதார் பிளாஸ்டிக் அட்டை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகம் முழுவதும் இணையதள சேவை மையங்களில் வழங்கப்பட்டு வந்த ஆதார் பிளாஸ்டிக் அட்டை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளை பயன்படுத்த ஆதார் ஆணையம் தடை விதித்ததையடுத்து தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் பிறப்பு இறப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசின் இணையதள சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. வாக்காளர் அடையாள அட்டைகள் பிளாஸ்டிக் அட்டைகளாக இணையதள சேவை மையங்களில் வழங்கப்படுகின்றன. இதே போன்று ஆதார் அட்டைகளும் பிளாஸ்டிக் அட்டைகளாக இ சேவை மையங்களில் வழங்கப்பட்டு வந்தன.
பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை பயன்படுத்த கடந்த வாரத்தில் ஆதார் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. ஆதார் விவரங்களை பதிவிறக்கம் செய்து மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் ஆதார் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து தமிழக அரசு பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் வழங்குவதை நிறுத்தியுள்ளது. இசேவை மையங்களை நிர்வகித்து வரும் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இசேவை மையங்களில் ஆதார் அட்டைகளின் நகலை ஏ4 தாளில் ரூ.12க்கு அச்சிட்டு வழங்கும் சேவை தொடரும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.