சுற்றுச்சூழல் பாதுகாப்பு.. மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜன. 1 முதல் தடை
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு மதுரை மாநகராட்சி தடை விதித்துள்ளது.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தொடங்கி வெள்ளி வீதி வரை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மதுரை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இந்தத் தடை ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள சித்திரை, ஆவணி, மாரட் மற்றும் மாசி ஆகிய 4 வீதிகளில் அடுத்த ஆண்டின் தொடக்க நாளான ஜனவரி 1ம் தேதியில் இருந்து தடை விதித்து மதுரை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளில் பிளாஸ்டிக் பொருட்களின் கழிவு தேங்கிக் கிடங்கின்றன. குறிப்பாக மீனாட்சி அம்மன் கோயில் செல்லும் சாலைகள் அனைத்திலும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. மேலும், இந்தப் பகுதியில் உள்ள பாதாள சாக்கடைகளில் பாலிதீன் பைகள் அதிகம் சேர்ந்து அடைப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு சுகாதார கேடு கோயிலின் அருகிலேயே உருவாகிறது. இதனால் இப்பகுதிகளில் பாலிதீன், பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தொடங்கி வெள்ளி வீதிகள் வரையுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் அது முழுமையாக கடைபிடிக்கப்படாத நிலையில் மதுரை மாநகராட்சி மீண்டும் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கான தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கோயிலுக்கு வருவோர் மற்றும் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வை மதுரை மாநகராட்சி ஏற்படுத்தி வருகிறது.