தமிழக அரசின் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை ரத்து செய்ய வலியுறுத்தல்
பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை ரத்து செய்ய வேண்டும் என்று பிளாஸ்டிக் தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
Recommended Video
சென்னை : பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தால், அதன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிளாஸ்டிக் தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் தடை செய்யப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிளாஸ்டிக் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஜி.சங்கரன், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் பேசுகையில், தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் தடை செய்யப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருப்பதன் மூலம், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் பதிவுபெற்ற பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 95% சிறு மற்றும் குறு தொழிலைச் சார்ந்தவை.
இவற்றின் மூலம் நேரடியாக 2 லட்சம் பேரும், மறைமுகமாக 3 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். அவர்களில் 70% பேர் பெண்கள். இதில், வட்டிக்கு கடன் வாங்கி, எந்திரங்களைக் கொள்முதல் செய்து பலர் தொழில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த அறிவிப்பு எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். கடந்த 2004ம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, பிளாஸ்டிக் தடை மசோதா கொண்டு வருவது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்த உண்மை நிலைகளை அவர் தெரிந்து கொண்டதால் அவர் அதை அமல்படுத்தவில்லை.
அதனால், அவர் வழியில் ஆட்சி நடத்துவதாக சொல்லும் தற்போதைய முதல்வரும் , இதைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை திரும்பபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.