ஈரோட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: அதிகாரிகளை முற்றுகையிட்ட வியாபாரிகள்.. பரபரப்பு!
பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
ஈரோடு: ஈரோட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மஜித்வீதியில் செயல்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய கூடாது என்பது அரசின் உத்தரவு. ஆனால் கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை ஆய்வு செய்யாமல் பறிமுதல் செய்வதாக வியாபாரிகள் குற்றம் சாட்டினர்.
மேலும் கடைகளில் பறிமுதல் செய்யப்படும் பொருட்களின் எடை அளவை தெரிவிக்க மறுக்கும் அதிகாரிகள் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அபராதம் விதிக்கும் முடிவை கைவிட்ட அதிகாரிகள் 40 மைக்ரோனுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை மட்டும் பறிமுதல் செய்தனர்.
அப்போது மாநகராட்சியின் வாகனத்தை வியாபாரிகள் சிறைபிடித்ததை தொடர்ந்து சம்பவ பகுதிக்கு வந்த நகர காவல்துறையினர் வாகனத்தை மீட்டனர். அபராதம் விதிப்பது குறித்து முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.