கங்கை அமரனுக்கு கழுத்துப்பகுதியில் அறுவை சிகிச்சை... கோவை மருத்துவமனையில் அனுமதி!
பிரபல இசையமைப்பாளர் கங்கைஅமரன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் : கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கங்கை அமரன் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உப்புச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது கங்கை அமரனின் உடல்நலன் தேறி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில், கங்கை அமரனை இசையமைப்பாளர் தேவா சந்தித்து நலம் விசாரித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பா.ஜ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் கங்கை அமரன்.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக, அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது வருகின்ற 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில், பா.ஜ.க சார்பில் மீண்டும் கங்கை அமரன் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று பாஜகவின் வானதிசீனிவாசன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.