தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நசிமுதின் இடமாற்றத்தை எதிர்த்து வழக்கு!
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நசிமுதின் ஸ்டெர்லைட் ஆய்வு குழுவில் இணைந்து பணியாற்ற முடியுமா என ஹைகோர்ட் கேள்வி
சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நசிமுதின் இடமாற்றத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். தொடர் போராட்டங்களும் நடந்து வந்தன. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான புகார்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நசிமுதின் விசாரித்து வந்தார்.
இதில் சுற்றுச்சூழலுக்கு ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்துவது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வாரியத்தின் உத்தரவின்பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இந்த ஆலை மீண்டும் இயங்கினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆராய தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு குழுவை நியமித்தது. இந்நிலையில் வாரிய தலைவர் நசிமுதினை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது.
அவரை இடம் மாற்றம் செய்யக் கூடாது என்று கோரிக்கை எழுந்தது. எனினும் அவரை தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக ஜம்பு கலோபரை நியமித்தது. இதை எதிர்த்து நாகர்கோவிலை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவில் தேவசகாயம், அதிகாரி நசிமுதின் தேசிய பசுமை தீர்ப்பாயத்தினால் ஏற்படுத்தப்பட்ட குழுவில் இடம் பெற்றுள்ளார். அரசால் நியமிக்கப்பட்டுள்ள புதிய அதிகாரியால் பிரச்சினையை புரிந்து கொள்ளவே நான்கைந்து மாதங்கள் ஆகிவிடும். எனவே அவரை மாற்றினால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடவடிக்கை பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆய்வு குழுவில் குழுவில் தற்போதைய புதிய தலைவருடன் இணைந்து நசிமுதின் பணியாற்ற முடியுமா என தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டனர். மேலும் வழக்கை வரும் செப்டம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தேவசகாயம் பேசுகையில், நசிமுதீனை மாற்றக் கூடாது. மாற்றினால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் என தமிழக அரசிடம் நாங்கள் வலியுறுத்தியிருந்தோம். ஆனால் தமிழக அரசு அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. நசிமுதின் இடமாற்றம் தவறானது என்று தமிழக அரசை குற்றம் சாட்டினார்.