என்னது மேற்கு தொடர்ச்சி மலையை வெட்டனுமா? கொதிக்கும் சூழல் ஆர்வலர்கள்!
மலைவாழ் மக்களை அப்புறப்படுத்தும் அரசின் திட்டம் ஒருபுறம், புதிய புதிய சாலைகளால் திமிறும் வன விலங்குகள் எனக் காட்டை அழிப்பது மறுபுறம் என அத்துமீறல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இப்படியொரு வழக்கு
Recommended Video
சென்னை: மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரத்தைக் குறைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவால் கலங்கிப் போய் இருக்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள்.
இப்படியொரு முயற்சியை எதிர்க்காமல் இருந்தால், தமிழகம் பாலைவனமாகிவிடும்' என எச்சரிக்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் தாக்கல் செய்த ஒரு மனுதான் இத்தனை பதற்றத்திற்கு காரணம். ஜெய்சுகின் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பது இதுதான்:
தடாலடி மனு
'தென்மேற்குப் பருவமழை, தமிழகத்துக்குள் வரவிடாமல் தடுப்பதே மேற்குத் தொடர்ச்சி மலைகள்தான். இந்தியா முழுவதும் தென்மேற்குப் பருவமழை பெய்தாலும், அந்த மழையால் தமிழகத்துக்கு எந்தப் பலனும் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம், தென்மேற்குப் பருவ மழைக்கான மேகங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைகளால் தடுக்கப்படுவதுதான். இதனால்தான், அவை தமிழகத்துக்குள் நுழைவதில்லை. இதனால் கேரள மாநிலத்துக்கு அதிக பலன் கிடைக்கிறது.
தண்ணீர் பாய்கிறதாம்
தவிர, மூன்றாயிரம் டி.எம்.சி தண்ணீர் கடலில் கலக்கிறது. எனவே, பருவமழையைத் தடுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை வெட்டி அதன் உயரத்தை குறைக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இதனைச் செய்ய வேண்டும். இதன்மூலம், தமிழகத்துக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். தண்ணீருக்காக பிற மாநிலங்களை நாட வேண்டிய அவசியமும் இல்லை' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சுற்றுச்சூழல்வாதிகள்
இப்படியொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். ' உயிர்ச்சூழல் நிரம்பிய பகுதி என யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்றது நீலகிரி சூழலியல் மண்டலம். பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு இந்தப் பகுதியைவிடச் சிறந்த உதாரணத்தைக் கூற முடியாது. மலைவாழ் மக்களை அப்புறப்படுத்தும் அரசின் திட்டம் ஒருபுறம், புதிய புதிய சாலைகளால் திமிறும் வன விலங்குகள் எனக் காட்டை அழிப்பது மறுபுறம் என அத்துமீறல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இப்படியொரு வழக்கு ஏன் தொடுக்கப்பட்டது என்றுதான் தெரியவில்லை. காட்டில் உள்ள இயற்கை வளங்களைச் சூறையாடுவதன் ஒருபகுதியாக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.
கொள்ளை திட்டம்
இந்த மனு குறித்துப் பேசும் எழுத்தாளரும் சூழல் ஆர்வலருமான கோவை சதாசிவம், " மேற்குமலைத்தொடரின் உயரத்தை வெட்டிக் குறைத்து விட்டால்... தென்மேற்கு பருவ மழை தமிழகத்தில் அதிகம் கிடைக்கும் என்று உச்ச நீதி மன்றத்தில் ஜெய்சுகின் என்பவர் ஒரு பொது நலவழக்கை தொடுத்துள்ளார். தமிழகத்தில் எல்லா இயற்கை வளங்களையும் சூறையாடிவிட்டு, இறுதியாக கொஞ்சம் மீதப்பட்ட மேற்கு மலைத்தொடரில் உள்ள தாது, கனிமங்களை களவாடும் பன்னாட்டு நிறுவனங்களின் சூழலியல் அரசியலை பலரும் இங்கே உணர்ந்து கொள்ளவில்லை. இதுவும் வளர்ச்சி, முன்னேற்றம், அறிவியல், ஆராய்ச்சி என்று முட்டுக்கொடுக்க சிலர் முன்வருவார்கள். நமக்கென்ன என்று மௌனம் காத்தால் தமிழகம் பாலை ஆவதைத் தடுக்க முடியாது" எனக் கொதிக்கிறார்.