குலசேகரன் பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனம் கூடாது.. தடை கோரி வழக்கு
மதுரை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களை ஆட தடை கோரியும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குலசேகரன் பட்டினத்தில் நடைபெறும் முத்தாரம்மன் கோவில் தசரா விழா மிகவும் விமரிசையானது, பிரபலமானது. ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் தசரா விழாவில் கடவுள் வேடம் போட்டு பக்தர்கள் காணிக்கை செலுத்துவார்கள்.
மைசூர் தசரா விழாவுக்குப் பிறகு தென்னிந்தியாவில் கோலாகலமாக நடைபெறும் தசரா விழா இதுதான். லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்பார்கள். இந்த நிலையில் இந்த விழாவில் ஆபாச நடனம் இடம் பெறுவதாக கூறி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதில், இந்த விழாவில் ஆபாச நடனம் இடம் பெறக் கூடாது, கடவுள் படங்களை அவமதிக்கும் வகையில் உடையில் இடம் பெறச் செய்யக் கூடாது என்று கடந்த ஆண்டே கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அதையும் மீறி சிலர் ஆபாச நடனக் குழுக்களை அழைத்து ஆட வைத்தனர்.
இதன் காரணமாக கோவிலின் புனிதம் கெட்டு விட்டது. கோவிலின் பாரம்பரியம் மற்றும் நடைமுறைப்படி பக்தர்கள் கடவுள் முதல் பிச்சைக்காரர் வரை விதம் விதமான வேடம் அணிந்து வந்து கடவுளை வணங்குவதுதான் வழக்கமாகும்.
ஆனால் இதற்குப் புறம்பாக உள்ளூர் மற்றும் அக்கம் பக்கத்தைச் சேர்ந்த சிலர் பணம் வசூலித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். சினிமாத் துறையிலிருந்து நடனக்காரர்களை அழைத்து ஆபாச நடனமும் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் 12 இடங்களில் தசரா விழா நடைபெறுகிறது. ஆனால் குலசேகரன்பட்டினம் தசரா விழாவில்தான் ஆபாச நடனம் இடம் பெறுகிறது. எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.