புதுச்சேரியில் குடியேறிய எஸ்.சி. இனத்தவருக்கு இட ஒதுக்கீடு விவகாரம்: அப்பீல் மனு மீது 24-ல் உத்தரவு
சென்னை: புதுச்சேரியில் குடியேறிய எஸ்.சி. பிரிவினர் இடஒதுக்கீடு கோரும் அப்பீல் மனு மீது வரும் 24-ந் தேதி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி எஸ்.சி., எஸ்.டி. இன மக்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் "1964-ஆம் ஆண்டு முதல் 1995-ஆம் ஆண்டு வரை புதுச்சேரி மாநிலத்துக்கு குடிபெயர்ந்த எங்களது வாரிசுகளுக்கு எஸ்.சி. இட ஒதுக்கீட்டின் கீழ் தொழிற்கல்வியைச் சேர்க்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால், எங்கள் மனுக்கள் இதுவரை பரிசீலனை செய்யப்படவில்லை. எனவே, நாங்கள் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இதேபோல் 2 மாணவர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை கடந்த 13-ந் தேதியன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஸ், புதுச்சேரியில் குடியேறியவர்கள், அம்மாநில குடிமக்களைப் போல தாங்களும் எஸ்.சி. என்பதால் இடஒதுக்கீட்டு உரிமையை கோர முடியாது; அவர்கள் புதுச்சேரியில் வசிப்பவர்கள் என்ற இருப்பிட சான்றிதழ் பெற்றிருந்தாலும் இந்த உரிமையை கோர இயலாது எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார்.
இதனை எதிர்த்து எஸ்.சி., எஸ்.டி. இனமக்கள் நலச்சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை நீதிபதிகள் அக்னிகோத்ரி, சசிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து, இவ்வழக்கில் தற்போதைய நிலைமையே நீடிக்கும். இதன் மீதான இறுதி உத்தரவு வரும் 24-ந் தேதி பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.