அண்ணா பல்கலை. மதிப்பெண் முறைகேடு.. சிபிஐ விசாரணை கோரிய மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி
மதுரை: அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் நடைபெற்ற மதிப்பெண் மறுமதிப்பீடு மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய மனுவை மதுரை ஹைகோர்ட் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கடந்த திங்கட்கிழமை பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அதில் சென்னையில் உள்ள அண்ணா பொறியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வு மற்றும் மறு மதிப்பீடு செய்வதில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது. வழக்கில் நடைபெற்று வரும் விசாரணையில் எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழகத்திலுள்ள 593 கல்லூரிகள் இந்த பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதில், பல லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த மாணவர்களின் எதிர்கால நலன் மீதான அக்கறை அடிப்படையில் இந்த வழக்குகள் அனைத்தையும் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும், என்று தனது மனுவில் கேட்டுக் கொண்டார்.
இந்த மனு இன்று நீதிபதி சுந்தரேஷ் மற்றும் சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு எப்போது பதிவு செய்யப்பட்டது? தற்போது என்ன விசாரணை நடைபெறுகிறது? என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டனர்.
"ஜூலை 31ம் தேதி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, தற்போது தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்று அரசு வழக்கறிஞர் பதில் தெரிவித்தார்.
மாணவர்கள் நலன் கருதி அரசு அக்கறை எடுத்து செயல்பட்டு வருகிறது என்று அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். இதை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். "இந்த வழக்கு விசாரணை ஆரம்பித்து இன்னும் பத்து தினங்கள் கூட ஆகவில்லை, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது என்பது உகந்தது அல்ல, எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதிகள் அறிவித்தனர்.