பாதுகாப்பு கோரி நாசகார ஸ்டெர்லைட் நிர்வாகம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு
ஆலைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்துள்ளது.
தூத்துக்குடி : போராட்டங்கள் வலுத்துவருவதால், ஆலைக்கு பாதுகாப்பு கேட்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு எதிரான அப்பகுதியைச் சேர்ந்த அ.குமரெட்டியாபுரம் கிராமமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் போராட்டம் 53வது நாளை எட்டியுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இதுவரை தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொடர் போராட்டம் தற்போது முற்றுகைப் போராட்டமாக மாறியுள்ளது. இதனால் ஆலை மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த மனுவில், தங்களது ஆலைக்கு எதிரான தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆலைக்கு வரும் வாகனங்களை போராட்டக்காரர்கள் தொடர்ந்து தடுத்து வருவதாகவும், வரும்காலங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் ஆலைக்கு பாதுகாப்பு அவசியம் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.