நெல்லையில் யுவராஜை வெடிகுண்டு வீசி கொலை செய்ய சதி: விசிகவினர் 2 பேர் கைது
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்து நெல்லையில் கையெழுத்திட்டு வரும் யுவராஜை வெடிகுண்டு வீசி கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய நபரான, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ், வாட்ஸ் அப் மூலம் வாக்குமூலம், பேட்டிகள் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த பெண் டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொள்ளவே, கோகுல்ராஜ் கொலை வழக்கும், டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் நாமக்கல் சிபிசிஐடி போலீசில் சரணடைந்தார். பின்னர் அவர் வேலூர் சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட யுவராஜ் பின்னர் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறையில் தன்னை கொலை செய்யப்போவதாக வாட்ஸ் அப் மூலம் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அவரது சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை கடந்த 30ந் தேதி நடைபெற்றது. யுவராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் தினமும் காலையும், மாலையும் ஆஜராகி யுவராஜ் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், வேலூர் மத்திய சிறையிலிருந்து விடுதலையான யுவராஜ், கடந்த 2ம்தேதி நெல்லை வந்தார். தினமும் காலையும், மாலையும் அவர் கையெழுத்து போட்டு வருகிறார். நெல்லை வந்துள்ள யுவராஜை தீர்த்துக்கட்ட சில சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கவே, யுவராஜுக்கு போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யுவராஜின் இருப்பிடம் பாதுகாப்பு கருதி நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தின் எதிரே உள்ள வீட்டுக்கு மாற்றப்பட்டது. அங்கும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அந்த பகுதியில் சந்தேகப்படும்படி யாரும் நடமாடுகிறார்களா? என்பதை அறிய சாதாரண உடையிலும், மாறுவேடத்திலும் போலீசார் ரோந்து சுற்றி வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் யுவராஜை வெடிகுண்டு வீசி கொலை செய்ய சிலர் சதி திட்டம் தீட்டியிருப்பதாக நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் திருஞானத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பாளை சப். இன்ஸ்பெக்டர் விமலன் தலைமையில் விசேஷ தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.
விசாரணையில் சதி திட்டம் தீட்டியதன் பின்னணியில் நெல்லை மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் எம்.சி.சேகர், கீழப்பாட்டத்தை சேர்ந்த முத்துராஜ் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து தனிப்படையினர் இருவரையும் கைது செய்தனர். கைதான 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
யுவராஜ் நெல்லையில் இருக்கும் வரைக்கும் மாநகர காவல்துறையினருக்கு கூடுதல் தலைவலிதான். அதே நேரத்தில் சமூகத்திற்காக தனது உயிரையும் தர தயாராக இருப்பதாக கூறியுள்ளார் யுவராஜ். நெல்லையில் தனக்கு நண்பர்கள் இருந்தாலும் சொந்த மாவட்டத்தில் இருக்கவே விரும்புகிறேன் என்று கூறும் யுவராஜ், அதற்காக நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் கூறியுள்ளார். நான் அனைத்து சமுதாயத்தினருடனும் இணைந்து போகவே விரும்புகிறேன் என்றும் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் யுவராஜ் இருக்கும் வரைக்கும் தென் மண்டலத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே கூறப்படுகிறது.