தினசரி போன் செய்து ஆபாசப் பேச்சு.. ஆசிரியரின் டார்ச்சர்.. விஷம் குடித்த மாணவி!
செல்போனில் செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தார்,
Recommended Video
ஓமலூர்: ஓமலூரில் செல்போனில் ஆபாசமாக பேசி ஆசைக்கு இனங்கும்படி ஆசிரியர் பேசியதால் மனமுடைந்த மாணவி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, கமலாபுரத்தை சேர்ந்தவர் சாந்தி. இவர் கணவனை இழந்தவர். சாந்திக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணவர் இறந்துவிட்ட நிலையில், சாந்தி கூலி வேலை செய்து குழந்தைகளை மிகவும் சிரமத்துடன் படிக்க வைத்து வருகிறார். அவரது மூத்த மகள் ராணி அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் வெள்ளையன் என்பவர் மாணவி ராணியை தனியாக அழைத்து ஆபாச வார்த்தைகளால் பேசி வந்துள்ளார். இதனை வீட்டில் சொல்லாமல் மனதுக்குள்ளேயே மாணவி புழுங்கி வந்துள்ளார்.தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
செல்போனில் செக்ஸ் தொல்லை
இந்நிலையில், வீட்டிலிருந்த ராணிக்கு ஆசிரியர் வெள்ளையன் தினமும் போன் செய்து என்ன ஆடை அணிந்து இருக்கிறாய் என்று ஆபாசமாகவும், தன் ஆசைக்கு இணங்க ஒத்துழைத்தால் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற வைப்பேன், இல்லையென்றால் தோல்வியடைய செய்துவிடுவேன் என மிரட்டியும் வந்துள்ளார். மேலும் வீட்டை விட்டு தனியாக கிளம்பி வந்து தன் ஆசையை தீர்த்துவிட்டு செல்லுமாறும் வற்புறுத்தியிருக்கிறார். இதனால் மனமுடைந்து புழுங்கி துடித்த ராணி, கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் ஆசிரியர் இம்சை தாங்காமல், வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து பதறிப்போன உறவினர்கள் மாணவியை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து ஓமலூர் போலீசார் ஆசிரியரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒழுங்கு நடவடிக்கை வேண்டும்
வெள்ளையன்... பெயருக்கும் ஆசிரியரின் செயலுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? அர்ப்பணிப்பு இல்லாதவர்கள் எல்லாம் ஆசிரியர் பணிக்கு வந்தால் இதுதான் கதிதான் ஏற்படும். முதலில் இதுபோன்ற வக்கற்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர் பணி நியமனத்தை முதலில் பறிக்க வேண்டும். இல்லையென்றால் முதலில் ஒழுக்கத்தை குறித்து இவர்களுக்குத்தான் பாடம் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பெரும் இரு அர்த்த பேச்சுகள்
கிராமபுறத்தில் இருக்கும் பெரும்பாலான பள்ளிகளிலேயே இதுபோன்ற கீழ்த்தர செயல்கள் நடைபெற்று வருகின்றன. ஆசிரியர்களின் இரட்டை அர்த்த பேச்சும், மாணவிகள் மீதான காம பார்வைகளும் இப்போதெல்லாம் ரொம்ப சாதாரணமான விஷயமாக போய்விட்டது. தனியார் பள்ளிகளில்தான் இப்படி கேடுகெட்ட செயல் நடக்கிறது என்றால் அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் இப்படி தரம்தாழும் நடவடிக்கையில் ஆசிரியர்கள் ஈடுபட்டால் பெற்றவர்கள் எப்படிதான் மாணவிகளை பள்ளிக்கு அனுப்புவது?
கசையடிதான் தரவேண்டும்
மாணவர்களின் படிப்பு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று தங்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி நடுரோட்டில் கூட போராட துணியும் ஆசிரியர்கள், இதுபோன்ற சக ஆசிரியர்களின் செயல்களுக்கெல்லாம் வாயே திறக்க மாட்டார்கள் போலிருக்கிறது? குறைந்தபட்சம் கண்டனம் கூட தெரிவிக்க மனமில்லை இவர்களுக்கு. தற்கொலை செய்ய முயலும் அளவுக்கு ஒரு ஆசிரியர் செக்ஸ் வார்த்தைகளை உதிர்த்துள்ளார் என்றால் இதுபோன்றவர்களையெல்லாம் முச்சந்தியில் கட்டிவைத்து கசையடி கொடுக்க வேண்டும்போல் பெற்றோர்களுக்கு தோன்றாதா?
கலந்து பேசும் சூழல் தேவை
பெற்றோர்களே, உங்கள் பெண் குழந்தைகளிடம் ஆசிரியர்களோ, மற்றவர்களோ தவறான அணுகுதல்கள், தொடுதல்கள், வார்த்தைகள் தென்பட்டால் உடனடியாக தெரிவிக்கும்படி அறிவுறுத்தி வையுங்கள். பிள்ளைகளுக்கு எந்தவகை பிரச்சனை என்றாலும் அதனை பெற்றவர்களிடம் கலந்து பேசும்படியான ஒரு சூழலை உருவாக்கி தர வேண்டியது உங்கள் பொறுப்புதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பாதிக்கும் அப்பாவி பெற்றோர்கள்
அதேபோல, மாணவிகளும், பள்ளியிலோ அல்லது வேறு எங்கு தங்களுக்கு பாலியல் சம்பந்தமான பிரச்சினை எது ஏற்பட்டாலும் அதனை உடனடியாக தங்கள் பெற்றோர்களிடம் தயங்காமல் தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை கேட்டுக்கொண்டு எந்த பெற்றோரும் சும்மா இருக்க மாட்டார்கள். உங்களைவிட அவர்களுக்கு இந்த உலகில் வேறு எதுவும் முக்கியமாக இருக்க முடியாது. எனவே ஒளிவுமறைவின்றி பெற்றோர்களிடம் உங்களிடம் மனக்குறையை சொல்ல முடிவெடுங்கள். ஒரு பக்கம் ஆசிரியர் தவறு செய்ய, அதை மறைத்து நீங்கள் தற்கொலை ஆயுதத்தை மறுபுறம் கையிலெடுக்க, இறுதியில் சம்பந்தமே இல்லாமல் வாழ்நாள் வரை பாதிக்கப்படபோவது அப்பாவி பெற்றோர்களே என்பதை மறந்துவிடாதீர்கள்.