பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற விண்ணப்ப பணி தொடக்கம்- ஆர்வம் காட்டாத மாணவர்கள்
சென்னை: பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. ஆனால் இதில் மாணவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் அந்தந்த தேர்வு மையங்கள் மூலமாகவும் மே 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
நேற்று முன்தினம் பிளஸ் 2 தேர்வு முடிவடைந்த நிலையில் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கும் பணி அனைத்து பள்ளிகளில் நேற்று தொடங்கியது. விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதால், ஏராளமான மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற வருவார்கள் என்று எண்ணப்பட்டது.
இதையடுத்து அந்தந்த பள்ளிகளில் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் விடைத்தாள் நகல் பெறுவது குறித்து விண்ணப்பிக்க ஒரு சிலரே வந்திருந்தனர். சில பள்ளிகளில் நேற்று விடைத்தாள் நகலுக்காக விண்ணப்பிக்க யாருமே வரவில்லை. விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் செய்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை.
வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாட விடைத்தாள்களின் நகலை கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். ஒரு சிலர் அனைத்து பாட தேர்வு விடைத்தாள்களின் நகல்களையும் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். மொழிப்பாடங்களுக்கு தலா ரூபாய் 550 ஆம், இதர பாடங்களுக்கு ரூபாய் 275 ஆம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணத்தை அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் செலுத்தி உரிய ரசீதினை பெற்றுக்கொண்டனர்.
விடைத்தாள்கள் விண்ணப்பிக்கும் போது மாணவர்களுக்கு ஒரு ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது.
இந்த சீட்டுகளில் குறிப்பிடப்பட்ட எண்களை பயன்படுத்தி மாணவர்கள் இணையதளம் மூலம் விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பின்னர் உரிய பாட ஆசிரியர்களிடம் அதனை காண்பித்து அவர்களிடம் அனைத்து விடைகளையும் முழுமையாக மதிப்பீடு செய்து கூடுதல் மதிப்பெண் பெற வாய்ப்புள்ளவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்வது மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்வது உள்ளிட்ட தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது, அந்தந்த பள்ளிகள் தங்களுக்கு வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் உள்ள குறியீட்டு எண்ணை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். உரிய அறிவிப்பு வந்ததும், அந்த எண்ணை பதிந்து இணையதளத்தில் இருந்து விடைத்தாள் நகல்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.