12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்... விரைவில் அறிவிப்பு
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் மாற்றமும், தேர்வு எழுதும் கால நேரம் மாற்றமும் விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
சென்னை: 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடவாரியாக 200 மதிப்பெண்களிலிருந்து 100 மதிப்பெண்களாக குறைத்து பள்ளிக் கல்வித் துறை விரைவில் அறிவிக்கவுள்ளது.
தமிழகத்தில் பொதுவாக 10 -ஆம் வகுப்பு வரை பாடவாரியாக 100 மதிப்பெண்கள் மட்டுமே இருக்கும். மொத்தம் 5 பாடங்களுக்கு தலா 100 மதிப்பெண்களாகும். அடுத்த படியாக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 6 பாடங்கள் வீதம் தலா 200 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
இதனாலேயே சிலர் 10-ஆம் வகுப்புக்கு பிறகு பாலிடெக்னிக் வகுப்புகளில் சேர்ந்து பிறகு லேட்டரல் என்ட்ரி எனப்படும் 2-ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேர்கின்றனர். இருப்பினும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் வரும் கணிதத்தை அடிப்படையாக கொண்டே பொறியியல் படிப்புகளில் வரும் என்பதால் அதிலும் மாணவர்களுக்கு சிக்கலே.
இந்நிலையில் பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பாடவாரியாக 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தேர்வானது 100 ஆக குறைக்கப்படும். இந்த மதிப்பெண் குறைப்பு குறித்து விரைவில் பள்ளிக் கல்வித் துறை அறிவிக்கும் என்று தெரிகிறது.
மேலும் தேர்வு எழுதும் நேரத்தையும் 3 மணி நேரத்திலிருந்து 2.30 மணி நேரமாக குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களை சராசரியாக கொண்டு சான்றிதழ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறையானது நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வசதியாக இருக்கும் என்று தெரிகிறது.
100 மதிப்பெண்களில் 90 மதிப்பெண்களுக்கான கேள்வி பாடத்திலிருந்து கேட்கப்படும், மீதமுள்ள 10 மதிப்பெண்கள் மாணவர்களின் செயல்திறனுக்கு வழங்கப்படும்.