பிளஸ் 2: கணிதத்தில் 3,361 பேர் சென்டம், இயற்பியலில் 5 பேர் மட்டுமே
சென்னை: பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் பாடத்தில் வெறும் 5 பேர் மட்டுமே 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 10.31 மணிக்கு வெளியானது.
இம்முறை 2 பேர் மாநிலத்தில் முதலாவதாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
முதலிடம்
ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த மாணவி ஆர்த்தி, மாணவன் ஜஸ்வந்த் ஆகியோர் 1,200க்கு 1195 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
200க்கு 200
கணிதப் பாடத்தில் 3 ஆயிரத்து 361 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் தாவரவியலில் 20 பேரும், வேதியியலில் 1, 703 பேரும், விலங்கியலில் 10 பேரும், வணிக கணிதத்தில் 1072 பேரும், வணிகவியலில் 3 ஆயிரத்து 84 பேரும், இயற்பியலில் 5 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
5 பேர் தானா?
இயற்பியலில் வெறும் 5 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் வாங்கியுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. இதே போன்று விலங்கியலிலும் 10 பேர் மட்டுமே 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மாணவிகள்
வழக்கம் போன்று இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 87.9 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகளில் 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.