நாட்டின் பிரதமராக ஆசை... 1195 மதிப்பெண் எடுத்த சென்னை மாணவி சத்ரியா கவின்
சென்னை: ப்ளஸ் 2 தேர்வில் பிரெஞ்ச் பாடத்தை எடுத்து படித்த சென்னை குட்ஷெபர்டு பள்ளி மாணவி சத்ரியா கவின் 1195 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். நாட்டின் பிரதமராக ஆசைப்படுவதாகவும், நாட்டு மக்களுக்கு தன்னால் ஆன சேவையை செய்ய ஆசை என்று கூறியுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களின் அதிக பட்ச ஆசையாக டாக்டர், பொறியாளர் என்பதுதான் இருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டேட் ரேங்க் எடுக்கும் மாணவர்கள் தங்களின் ஆசையாக கலெக்டர் ஆக வேண்டும் என்று கூறி வந்தனர்.
இன்றைக்கு ப்ரெஞ்ச் மொழி பாடத்தை முதல் பாடமாக எடுத்து படித்து 1195 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் பிடித்த மாணவி ஒருவர் தனது, லட்சியம், கனவாக நாட்டின் பிரதமராக வேண்டும் என்றும் பிரதமர் இந்திரா காந்தியைப் போல வரவேண்டும் என்றும் கூறியுள்ளார். அந்த மாணவியின் பெயர் சத்ரியா கவின். இவர் குட்ஷெபர்டு பள்ளியை சேர்ந்த மாணவியாவார்.
அதே பள்ளியைச் சேர்ந்த ஸ்ருதி என்பவர் 1194 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். கோவையை சேர்ந்த விமல் ஜோதி மெட்ரிக் பள்ளி 1193 மதிப்பெண்களுடன் 3ம் இடம் பிடித்துள்ளார்.
மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள மாணவி, சென்னை குட்ஷெப்பர்டு பள்ளி மாணவி சத்ரியா கவின், பத்தாம் வகுப்பு வரை தமிழ்க் கல்வியில் படித்துவிட்டு, பின்னர் பிரெஞ்சு மொழியை முதல்பாடமாக எடுத்துப் படித்து சாதித்துள்ளார்.
இதுகுறித்து டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சத்ரியா, நாட்டின் பிரதமராவதே தனது லட்சியம் என்று கூறியுள்ளார். கராத்தே போட்டிகளில் கருப்புப் பெல்ட் வென்றுள்ள இவர், சிறந்த பேச்சாளரும் ஆவார்.
மாணவர்களின் கனவுகளும், லட்சியங்களும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.