வேட்டி தினம்.. ஒரு நாள் போதுமா...?
சென்னை: இன்று வேட்டி தினம் என்று எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு நாள் வேட்டி கட்டினால் போதுமா.... இதுதான் பல தமிழ் உணர்வாளர்களின் மனதில் எழுந்துள்ள கேள்வி.
இந்தக் கேள்விக்குக் காரணம், தமிழர்கள் தங்களது பாரம்பரியத்தை மறந்து போய் விட்ட நிலையில் அதை நினைவுபடுத்த ஒரு தினத்தைக் கொண்டாடும் அளவுக்கு நிலைமை போய் விட்டதே என்ற ஆதங்கமும், வேதனையும்தான்.
உண்மையில், வேட்டியை பாரம்பரிய உடையாக கொண்டவர்களில் அதை வேகமாக மறந்தவர்களை வரிசைப்படுத்தினால் தமிழர்கள்தான் முதலிடத்தில் இருப்பார்கள்.
வேட்டியை மறக்காத மலையாளிகள்
மலையாளிகளைப் பார்த்தால் வேட்டியை தங்களது உடையாக மட்டுமல்லாமல், இன உணர்வாகவும் பார்ப்பவர்கள். எந்த இடத்திற்குப் போனாலும் வேட்டியை கைவிடாதவர்கள். எத்தனையோ உடைகளை அணிந்தாலும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வேட்டியோடு கை குலுக்குவதைப் பார்க்கலாம்.
பளபள உடைக்கு மாறி விட்ட தமிழர்கள்
தமிழ் நாட்டில் அப்படிப்பட்ட பழக்கம் பெரிதாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கல்யாணம் நடக்கும் நாளன்றுதான் பெரும்பாலான இளைஞர்கள் வேட்டியே கட்டுகிறார்கள் இன்று. அதுவும் கூட யாராவது கட்டி விட்டால்தான் உண்டு. வேட்டி கட்டவே தெரியாத பல இளைஞர்களை இன்று பார்க்கலாம்.
கரையான் போல புகுந்த மாற்று உடைகள்
கிராமப்புறங்களில்தான் வேட்டி பெரிய அளவில் இன்றும் புழங்கிக் கொண்டுள்ளது. ஆனால் அங்கும் கூட கரையான் புகுந்தது போல மாடர்ன் டிரஸ் புகுந்து விட்டதைக் காண முடிகிறது.
50 வயசில் அரை டிரவுசருடன்...
நகரங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 5 வயசுப் பையன் போடும் டிரவுசருடன் 60 வயதுக்காரர் போட்டுக் கொண்டு பட்டப் பகலில் தாட் பூட் என்று நடப்பதை சகஜமாக காணலாம். அது அவரவர் சவுகரியம் என்று சொன்னாலும் கூட அவரே அப்படி ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு திரிந்தால், அவருடைய பேரனுக்கு யார் வேட்டி கட்டச் சொல்லித் தருவது என்ற கேள்வியும் கூடவே வருகிறதே...
ஜீன்ஸ் மோகம்
இன்றுள்ள இளைஞர்களுக்கு ஜீன்ஸ் மோகம்தான் அதிகம் உள்ளது. அதுவும் ஒரே ஜீன்ஸை பல நாட்களுக்குப் போட்டுக் கொண்டு கழட்டாமல் அழிச்சாட்டியம் பண்ணுவோரின் எண்ணிக்கை நிறைய உண்டு.
அரசியல்வாதிகள்தான் சூப்பர்
அந்த வகையில் வேட்டியை இன்னும் கைவிடாத ஒரே இனமாக அரசியல்வாதிகள்தான் திகழ்கிறார்கள். அரசியலுக்குப் புகுந்த அடுத்த நிமிடமே ஒரு டஜன் வேட்டியைத்தான் அவர்கள் முதலில் வாங்குவார்கள். அதுவும் கதர்ச்சட்டையும், கைத்தறி வேட்டியும் அவர்களுக்கான சீருடை போல மாறி வி்ட்டது. நம்ம ஊர் அரசியல்வாதிகளின் அரசியலை விட அவர்கள் போடும் அந்த வேட்டி கெட்டப்தான் செமையாக இருக்கிறது. பாரம்பரியத்தையும், கம்பீரத்தையும் கட்டிக் காக்கும் அவர்களை உண்மையில் நாம் பாராட்டத்தான் வேண்டும்.
வேட்டி தினம் நல்லதா கெட்டதா...
இது ஒரு வகையில் நமது பாரம்பரியத்தின் பெருமையை, கம்பீரத்தை நினைவுபடுத்தி வேட்டிதாய்யா உன்னோட உணர்வு, இன அடையாளம் என்று காட்ட உதவும் என்றாலும் கூட இப்படி தினம் வைத்துச் சொல்ல வேண்டிய நிலைக்குப் போய் விட்டோமே என்ற ஆதங்கமும் கூடவே ஏற்படத்தான் செய்கிறது.
அடுத்து சேலை தினம், தாவணி தினம் வருமோ...
இனி அடுத்து பெண்களுக்காக சேலை தினம், பட்டுச் சேலை தினம், பட்டுப் பாவாடை தினம், தாவணி தினம் என்று வந்தாலும் வரலாமோ என்று அஞ்சும் அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது.. காரணம், ஆண்கள் அளவுக்கு மங்கையர்களும் ஏகப்பட்ட மாடர்ன்ஸ் டிரஸ்ஸுக்கு மாறி விட்டார்களே...