ஹால்டிக்கெட்டை கிழித்து போட்டு காதலிக்க வற்புறுத்திய மாணவன்... மனமுடைந்த +2 மாணவி தற்கொலை!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஈவ்டீசிங்கால் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Recommended Video
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் சக மாணவன் ஈவ்டீசிங் செய்ததால் விரக்தியடைந்த +2 மாணவி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரு தலை காதல் காரணமாக சக மாணவன் மாணவியின் ஹால்டிக்கெட்டை கிழித்து போட்டதால் மனமுடைந்து மாணவி தற்கொலை முடிவை எடுத்தார் என்று கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தேவீரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசி. அகரம் அரசுப் பள்ளியில் தமிழரசி 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இவருடைய வகுப்பை சேர்ந்த பசுபதி என்ற மாணவன் தமிழரசியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு தமிழரசிக்கு மாணவன் தொல்லை கொடுத்துள்ளான்.
மாணவிக்கு தொடர்ந்து தொல்லை
நேற்றைய தினம் தமிழரசி பொதுத்தேர்வையொட்டி பள்ளி சிறப்பு வகுப்பிற்கு சென்றுள்ளார். அப்போது பசுபதி தமிழரசியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளான்.
மனமுடைந்த மாணவி தற்கொலை
தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து பசுபதி தமிழரசியின் ஹால்டிக்கெட்டை பிடுங்கி வைத்துக் கொண்டு அதனை கிழித்து போட்டுள்ளான். இதனால் மனமுடைந்த தமிழரசி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
போலீஸ் விசாரணை
மாணவி தமிழரசியின் தற்கொலை பின்னணியில் ஹால்டிக்கெட் கிழித்து போட்டது மட்டும் தான் காரணமா அல்லது மாணவன் பசுபதி வேறு ஏதேனும் மிரட்டல் விடுத்ததால் தமிழரசி தற்கொலை முடிவை எடுத்தாரா என்பது தெரியவில்லை. தமிழரசியின் தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு
மாணவி தமிழரசியின் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்த பின்னரே உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.