எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்- அமைச்சர்கள் அறிவிப்பு
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ கூட்டாக அறிவித்துள்ளனர்.
சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ கூட்டாக அறிவித்தனர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது :
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது, மிக பிரம்மாண்டமான வகையில் சென்னையில் நடைபெற உள்ள நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
ஜெயலலிதா இறந்த சமயத்தில் கட்சியும் ஆட்சியும் பிளவுபட்டுவிடக்கூடாது என்பதால் அப்போதைய நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்து செயல்பட்டோம்.
சசிகலாவை சிறையில் அமைச்சர்கள் சந்தித்ததை சர்ச்சையாக்குகிறார் தினகரன். தேவையில்லாத அவதூறு பரப்பினார் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று பரிசீலிப்போம்.
முதல்வர் பழனிசாமி மீதும் வழக்கு இருப்பதாக அவதூறு பரப்புகிறார். ஜெயலலிதாவின் அரசை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றால் அது தினகரனின் குறை. 10 ஆண்டு அரசியல் பொதுவாழ்வில் இருந்து விட்டா அவர் இந்த அரசைப் பற்றி இகழ்ந்து பேசுகிறார்.
பொதுக்குழு முடிந்துள்ளது, அந்தத் தீர்மானங்களை முதல்வரும் துணை முதல்வரும் தேர்தல் ஆணையத்திடம் அனுப்புவார்கள். அதில் உள்ள அம்சங்களை ஆராய்ந்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும், இது ஒரு நாளில் எடுக்கும் நடவடிக்கையல்ல.
எம்ஜிஆரின் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் என்று சேலத்தில் நடந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உறுதியாக சொல்லியிருக்கிறார். இதே போன்று நாமக்கலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று சொல்லியிருக்கிறார்.
தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்கும் பணியில் முதல்வரும், துணை முதல்வரும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பக்கபலமாக தொண்டர்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள் என அனைவரும் உள்ளனர் என்றார்.