112 அடி உயர ஆதியோகி சிலையை திறக்க வருகிறார் பிரதமர் மோடி.. உச்சக்கட்ட பாதுகாப்பில் கோவை
வெள்ளையங்கிரி மலையில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார்.
கோவை: வெள்ளையங்கிரி மலையில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார். இதற்காக கோவையில் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளையங்கிரி மலைப்பகுதியில் 112 அடி உயர ஆதியோகி சிலையை ஈஷா யோகா நிறுவனம் அமைத்துள்ளது.மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்.
இதற்காக அவர் விமானம் மூலம் இன்று கோவை வரவுள்ளார். இந்தி நிகழ்ச்சியில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி ஆளுநர் கிரண்பெடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தராராஜே சிந்தியா, மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
இன்று மாலை கோவை வருகை
இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று மாலை கோவை வருகிறார். பின்னர் பிரதமர் மோடி விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் ஈஷா யோகா மையத்துக்கு புறப்பட்டு செல்கிறார். இதைத்தொடர்ந்து 112 அடி உயரம் கொண்ட சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.
கோவிலைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு
பிரதமர் மோடியின் வருகையையொட்டி கோவையிலும் விழா நடைபெறும் பகுதியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவையில் கோவிலைச் சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு
பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை ஐ.ஜி. பியூஸ் பாண்டே தலைமையில் 60 பேர் கோவை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார்கள். தமிழக கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.
சாலை வழியும் தயார்
கோவை விமானநிலையத்தில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு பிரதமர் ஹெலிகாப்டரில் செல்ல வானிலை சரியாக இல்லை என்றால், அவர் கார் மூலம் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் சாலைகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
பொதுமக்களுக்கு கட்டுப்பாடு
விழாவுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.