சசிகலா காலில் எடப்பாடி பழனிசாமி விழும் நேரம் மீண்டும் வரும் : புகழேந்தி எச்சரிக்கை
மீண்டும் சசிகலா காலில் எடப்பாடி பழனிசாமி விழும் நேரம் வரும் என்று புகழேந்தி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
Recommended Video
கோவை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும் என்று டி.டி.வி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்து உள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானதை தொடர்ந்து டி.டி.வி தினகரன் தமிழகமெங்கும் மக்களை சந்தித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக இந்த மாத இறுதியில் கோவையில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால், கோவையில் டி.டி.வி தினகரன் அணி சார்பில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்து உள்ளது. இதுதொடர்பாக முன்னாள் அதிமுக கர்நாடக மாநில செயலாளரும், தற்போது டி.டி.வி தினகரனின் ஆதரவாளருமான புகழேந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
காலச்சக்கரம் சுழலும்
அப்போது, எங்களுடைய அணியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறை அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளது. காக்கி சட்டையை போட்டுக்கொண்டு அமைச்சர்களுக்கு ஜால்ரா அடிப்பதை காவல்துறை கைவிடவேண்டும். மீண்டும் காலச்சக்கரம் சுழலும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று பேசி உள்ளார்.
ஜால்ரா அடிப்பவர்களுக்கு எச்சரிக்கை
மேலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலாவினால் முதல்வர் ஆக்கப்பட்டோம் என்பதை எடப்பாடி பழனிசாமி மறந்துவிட வேண்டாம். கட்சியும், ஆட்சியும் விரைவில் எங்களிடம் வந்து சேரும். அப்போது இதே முதல்வர் மீண்டும் சசிகலா காலில் விழ வேண்டிய நேரம் வரும். அப்போது இந்த ஜால்ரா கூட்டம் எங்கே போகும் ? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்திக்க டெல்லி சென்றது குறித்த கேள்விக்கு, எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, எடப்பாடியையோ, பன்னீர்செல்வத்தையோ மோடி சந்திக்க விரும்பவில்லை என்று தெரியவந்து உள்ளது. இதற்குக் காரணம் தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர் டி.டி.வி தினகரன் தான் என்பதை மோடி உணர்ந்துவிட்டார். தமிழ் மக்களும் அதை உணர்ந்து இருக்கிறார்கள்.
தைரியம் இல்லாத அரசு
மெரினாவில் அன்றைய கூட்டம் போல மாணவர்களும், இளைஞர்களும் டி.டி.வி தினகரன் பின்னால் அணி திரண்டு நிற்கிறார்கள். அதை எதிர்கொள்ள இந்த அரசுக்கு தைரியம் இல்லை. இருந்தால், உள்ளாட்சி தேர்தல் தேதியை உடனே அறிவிக்க சொல்லுங்கள் பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.