150 நிறுவனங்கள்.. 670 அமைப்புகள்.. ராணுவக் கண்காட்சியில் பங்கேற்பது யார் யார்?
Recommended Video
சென்னை: சென்னையில் முதல் முறையாக நடைபெறும் ராணுவக் கண்காட்சியை இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இன்று சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெறும் 10-வது ராணுவக் கண்காட்சியான, டிஃபெக்ஸ்போ-2018-ஐ தொடங்கி வைக்கிறார்.
துகாப்புச் சாதனங்கள் மற்றும் கருவிகள் ஏற்றுமதியில் இந்தியாவின் வலிமையைப் பறைசாற்றும் விதமாக, இந்த ஆண்டு ராணுவக் கண்காட்சி, "இந்தியா: வேகமாக வளர்ந்துவரும் பாதுகாப்புத் தளவாட உற்பத்திக் கேந்திரம்" என்பதை மையக்கருத்தாகக் கொண்டு நடத்தப்படுகிறது.
670 அமைப்புகள்
150 சர்வதேச நிறுவனங்கள் உட்பட 670-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த ராணுவக் கண்காட்சியில் பங்கேற்கின்றன. இம்முறை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் 15 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டாடா, மஹிந்திரா
இந்திய நிறுவனங்களைப் பொறுத்தவரை, டாடா, எல்&டி, கல்யாணி, பாரத் ஃபோர்ஜ், மஹிந்திரா, எம்.கே.யு., பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், பாரத் மின்னணு நிறுவனம், பி.டி.எல்., பி.இ.எம்.எல், எம்.பி.எல், ஜி.ஆர்.எஸ்.சி, ஜி.எஸ்.எல், ஹெச்.எஸ்.எல், மிதானி மற்றும் படைக்கலத் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன.
ரஷ்யா, இங்கிலாந்து
சர்வதேச நிறுவனங்களைப் பொறுத்தவரை, லாக்ஹீட் மார்ட்டின், போயிங் (அமெரிக்கா), சாப் (ஸ்வீடன்), ஏர்பஸ், ரஃபேல் (பிரான்ஸ்), ரோஸன்போரோன் ஏற்றுமதி நிறுவனம், யுனைடெட் ஷிப் பில்டிங் (ரஷ்யா) பி.ஏ.இ. சிஸ்டம்ஸ் (இங்கிலாந்து), சிபாத் (இஸ்ரேல்), வர்த்சிலா (ஃபின்லாந்து), ரோடே மற்றும் ஸ்வார்ஸ் (ஜெர்மனி) உள்ளிட்ட நிறுவனங்கள் ராணுவக் கண்காட்சி 2018-ல் பங்கேற்கின்றன.
புற்று நோய் மருத்துவமனை செல்லும் மோடி
இதுதவிர, சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையையும் பிரதமர் பார்வையிடுகிறார். அங்கு வைரவிழா நினைவுக் கட்டடமான, வலி நிவாரணக் கவனிப்பு மையம் (மகாவீர் ஆஷ்ரே) ஸ்ரீபெரும்புதூர் பெயர்ப் பலகையைத் திறந்து வைக்கும் பிரதமர், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் பகல்நேரப் பராமரிப்பு மையம் மற்றும் செவிலியர் விடுதியையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.