தமிழ் மண்ணிற்கு தலை வணங்குகிறேன்... பிரதமரின் "ஐஸ்" உரை!
தமிழ் மண்ணிற்கு தலைவணங்குகிறேன் என்று பிரதமர் மோடி ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தில் கோர்வையாக பேசி அசத்தினார்.
Recommended Video
சென்னை : தமிழ் மண்ணிற்கு தலைவணங்குகிறேன், அன்புமிக்க சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழில் கோர்வையாக பேசி அசத்தினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். 5 பெண்களுக்கு ஸ்கூட்டருக்கான சாவியுடன், ஆர்சி புத்தகத்தையும் பிரதமர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது : அன்புமிக்க சகோதர சகோதரிகளே வணக்கம், தமிழ் மண்ணிற்கும் பாரம்பரியத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். மகாகவி சுப்ரமணிய பாரதியின் மண்ணிலே நிற்பதை பெருமைப்படுகிறேன். பெண்ணே நீ படித்தால் குடும்பமே கற்றதாக அர்த்தம் என்று கோர்வையாக தமிழில் பேசினார்.
இதனைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் தனது உரையை மோடி நிகழ்த்தினார். ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஜெயலலிதா எங்கு இருந்தாலும் தமிழக மக்களின் முகத்தில் சந்தோஷத்தை பார்த்து மகிழ்ச்சியடைவார்.
நான் இன்று அவருடைய கனவுத் திட்டமான அம்மா இருசக்கர திட்டத்தை தொடங்கி வைக்கிறேன். அதுவும் அவருடைய 70வது பிறந்தநாளில் தொடங்கி வைத்திருக்கிறேன். 70 லட்சம் மரக்கன்றுகள் தமிழகம் முழுவதும் நடப்பட்டுள்ளது, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
இந்த 2 திட்டங்களும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், இயற்கையை பாதுகாக்கவும் நீண்ட கால திட்டங்கள். பெண்களை முன்னேற்றுவதன் மூலம் ஒட்டு மொத்த குடும்பத்தையும் முன்னேற்றமடையச் செய்ய முடியும். ஒரு பெண்ணிற்கு கல்வி அளித்தால் அந்த குடும்பத்திற்கே கல்வி அளித்தது போல, ஒரு பெண்ணிற்கு சுகாதாரம், பாதுகாப்பு அளித்தால் அதுவும் அந்த குடும்பத்திற்கே செய்யும் நன்மை.
மத்திய அரசு இந்த இலக்கை நோக்கி தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது. சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிமைபடுத்துவதற்கான முயற்சிகளைத் தான் அரசு செய்து வருகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.