பற்றி எரியும் 'காவிரி' விவகாரம்.... ஜெ. உடல்நலம் விசாரிக்க வருவாரா மோடி?
சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க பிரதமர் மோடி வர தயங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிய மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் பிரதமர் மோடியும் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்கக் கூடும் என கூறப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் முதலே மோடி இன்று வருவார் நாளை வருவார் எனக் கூறப்பட்டு வருகிறது. ஆனாலும் மோடியின் சென்னை வருகை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
தற்போது தமிழகத்தில் காவிரி பிரச்சனையில் மோடி தலைமையிலான மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. நேற்றும் இன்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் தொடருகிறது.
அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து ரயில்களை மறித்து வருகின்றனர். இதனால் ரயில் சேவைகள் கடந்த 2 நாட்களாக கடுமையாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் இப்படி பற்றி எரியும் நிலையில் பிரதமர் மோடி சென்னை வரும்போது அரசியல் கட்சிகள் போராட்டங்களை அறிவிக்கலாம். இதுவும் மோடி சென்னை வருகையை தயங்க வைக்கலாம் எனக் கூறப்படுகிறது.