அதிபர் ஆட்சி முறையை செயல்படுத்துகிறார் மோடி: அருண்சோரி காட்டம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அதிபர் ஆட்சி முறையை செயல்படுத்துகிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அருண்சோரி கடுமையாக தாக்கியுள்ளார்.
வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் அருண்சோரி. ஆனால் அண்மைக்காலமாக பாஜகவின் செயல்பாடுகளில் இருந்து விலகி கடுமையாக தாக்கி வருகிறார்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று அருண்சோரி அளித்த பேட்டியில் கூறியதாவது:
மோதல் போக்கு
மக்கள் அளித்த மிகப்பெரிய வாய்ப்பை மோடி வீணாக்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமராக இருந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார்.
எத்தனை சர்ச்சைகள்
தாய்மதம் திரும்புதல், காதல்-ஜிஹாத், மாட்டிறைச்சிக்கு தடை, விருதுகள் திருப்பி அளிக்கப்பட்ட விவகாரம், தேசவிரோதக் குற்றச்சாட்டு, பாரதமாதாவுக்கு ஜே கோஷம், மாணவர்கள் போராட்டம் போன்ற பிரச்னைகள் மத்திய அரசால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டவை.
ஜனாதிபதி ஆட்சி தவறு
பிரித்தாளும் சூழ்ச்சியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. உத்தரகாண்ட், அருணாசலப் பிரதேசம் ஆகிய காங்கிரஸ் ஆட்சி நடந்த மாநிலங்களில் நிலைமையை மோசமாக்கி ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்தது தவறு. இதனை பாஜக திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளது.
பொறுப்பில்லாத அரசு
வெளியுறவுக் கொள்கையில் முக்கியமான அம்சமான பாகிஸ்தானுடனான உறவை மோடிக்கு கையாளத் தெரியவில்லை. பாகிஸ்தான் தரப்பு இந்தியாவை முட்டாளாக நோக்கும் வகையில் மோடியின் செயல்பாடுகள் உள்ளன. சீனாவுடனான உறவிலும் அவரிடம் தெளிவான பார்வையில்லை.
அதிபர் ஆட்சியை போல
வரி விதிப்பு விவகாரம், பொருளாதாரக் கொள்கை, வங்கிகளின் பிரச்னை போன்றவற்றில் அரசு பொறுப்பற்ற வகையில் செயல்பட்டு வருகிறது. மோடி தான் ஒருவரை மட்டுமே முன்னிறுத்தி தனிநபர் அரசை நடத்துகிறார். இது இந்தியாவுக்கு நல்லதல்ல. மோடியின் செயல்பாடுகள் சுயநலமிக்கவையாக உள்ளன. அதிபர் ஆட்சி முறையை அவர் செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அருண்சோரி கூறியுள்ளார்.