ஐஐடி சுவர் இடிப்பு, சிறுவர் பூங்கா இழுத்து மூடல்... பிரதமர் வருகையால் அல்லோகல்லப்படும் சென்னை!
பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி கிண்டி சிறுவர் பூங்காவிற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: ராணுவ கண்காட்சியை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தருவதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐஐடி வளாகத்தில் பிரதமருக்காக சிறப்பு ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அருகில் உள்ள கிண்டி சிறுவர் பூங்காவிற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த திருவிடந்தையும் பிரம்மாண்டமான ராணுவ கண்காட்சி நேற்றைய தினம் தொடங்கியது. ரூ. 800 கோடி செலவில் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார்.
இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் திருவிடந்தை ராணுவ கண்காட்சி நிகழ்ச்சியை முடித்துவிட்டு அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் டைமண்ட் ஜூப்ளி கட்டிடத்தை திறந்து வைக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் பிரதமருக்கு கடும் எதிர்ப்புகள் இருப்பதால் சாலை வழி பயணத்தை தவிர்த்து வான்வழி பயணத்தையே பிரதமர் மேற்கொள்கிறார்.
மான்கள் நடமாடும் பகுதி சுவர்
மாமல்லபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் கிண்டி வருவதற்கு வசதியாக ஐஐடி பல்கலைக்கழக வளாக சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிபேடு அமைப்பதற்காக சென்னை ஐஐடி வளாகத்தில் இடிக்கப்ப்டடுள்ள சுற்றுச்சுவரானது மான்கள் நடமாடும் முக்கிய பகுதியின் சுற்றுச் சுவராகும்.
கிண்டி சிறுவர் பூங்காவிற்கு விடுமுறை
அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு பிரதமர் செல்ல வசதியாக ஐஐடி வளாகத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையால் புற்றுநோய் மையத்தை ஒட்டியுள்ள பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக் கூடிய கிண்டி சிறுவர் பூங்காவிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்எச்சரிக்கை நடவடிக்கை
வழக்கமாக கிண்டி சிறுவர் பூங்காவிற்கு செவ்வாய்க்கிழமைகளில் தான் விடுமுறை அளிக்கப்படும். பராமரிப்பு காரணங்களுக்காக அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால் பிரதமர் வருகையையொட்டி கிண்டி சிறுவர் பூங்கா வழியாக யாரும் அடையாறு புற்றுநோய் மையத்திற்குள் புகுந்துவிடக்கூடாது என்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையின் மழுப்பல் பதில்
ஆனால் தமிழ்நாடு வனத்துறையோ நிர்வாகக் காரணங்களுக்காக 12.4.2018 அன்று கிண்டி சிறுவர் பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று மழுப்பலான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. கிண்டி சிறுவர் பூங்காவிற்கு அடையாறு புற்றுநோய் மையத்திற்கும் இடையில் ஒரு சுவர் தான் வித்தியாசம் என்ற நிலையில் பிரதமர் வருகையின் போது எந்த அசம்பாவிதங்களும் நடந்துவிடாமல் இருப்பதற்காகவே கிண்டி பூங்காவிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.