பிரதமர் மோடி பிப்.24-ல் தமிழகம் வருகை- அம்மா ஸ்கூட்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்!
ஸ்கூட்டருக்கான மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார்.
சென்னை : மகளிருக்கு ஸ்கூட்டருக்கான மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கவும், தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகை தருகிறார் பிரதமர் மோடி.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி சென்ன்னையில் மாலை நடைபெற இருக்கும், ஸ்கூட்டருக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தருகிறார்.
அடுத்து ஜைன சர்வதேச வர்த்தக அமைப்பான 'ஜித்தோ' சார்பில், நடைபெறவுள்ள சர்வதேச தொழில் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
'ஜித்தோ கனெக்ட்' என்கிற இந்த தொழில் மாநாட்டில், 25 நாடுகளைச் சேர்ந்த, இந்திய வம்சாவளியின், 3,500 தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர். இதில், 1.5 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து பிப்ரவரி 25ம் தேதி, புதுச்சேரியில் உள்ள ஆரோவில் குடியிருப்பின் ஐம்பதாவது ஆண்டுவிழாவில் பங்கேற்க உள்ளார். அதன் பின்பு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச்செல்கிறார்.
ஏற்கனவே, சட்டசபையில் ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் படத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்தும், அதில் மோடி பங்கேற்கவில்லை. இதனால் அந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்கியது.
இதனால், ஸ்கூட்டருக்கான மானியம் வழங்கும் திட்டத்தில் கலந்துகொண்டு அதை ஈடுசெய்ய பிரதமர் மோடியும், அதிமுக தலைமையும் முடிவெடுத்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.