குளச்சல் துறைமுகத்துக்கு ஜெ. முன்னிலையில் மோடி அடிக்கல் நாட்டுவார்...: பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: குளச்சல் துறைமுகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ரூ.25 ஆயிரம் கோடி செலவில் மிகப்பெரிய சர்வதேச துறைமுகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
குளச்சலில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலம் விழிஞ்ஞத்திலும் புதிய துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. எனவே குளச்சலில் துறைமுகம் அமைவதை கேரளா விரும்பவில்லை.
எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் ஒரு குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்தினார்கள்.
ஆனால் கேரளாவின் கோரிக்கையை மோடி நிராகரித்தார். குளச்சலில் துறைமுகம் அமைப்பது உறுதி என்று திட்டவட்டமாக கூறினார். இதனால் துறைமுக பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கேரள முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றியை கூறி கொள்கிறோம். இரு துறைமுகங்கள் அருகருகே அமைவதால் எந்த பிரச்சனையும் இல்லை. குளச்சலில் துறைமுகம் அமைவதால் விழிஞத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. அடிக்கல் நாட்டு விழா ஓரிரு மாதங்களில் நடக்கும். மிகப்பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என்றார்.