நாளை சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கிறார் பிரதமர்? காவிரிக்காக கொந்தளிக்கும் தமிழகம் சாந்தமாகுமா?
சென்னைக்கு நாளை வரும் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
சென்னை: ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சிக்கு சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி நாளை மதியம் செய்தியாளர்களை சந்திக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகமே கொழுந்து விட்டு எரிகிறது. நாளுக்கு நாள் போராட்டங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
ஐபிஎல் போட்டிகளை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் சென்னை ஐபிஎல் போட்டிகளை இடமாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிட நாளை பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. மேலும் பிரதமர் வானில் பறந்து வந்தாலும் சரி சாலை மார்க்கமாக வந்தாலும் சரி கருப்பு கொடி காட்டியே தீருவோம் என்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும், தமிழ், விவசாய அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் அவர் நாளை மதியம் சென்னை ஐஐடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த கூட்டத்திலும் தமிழர்களின் பிரச்சினைக்கு மோடி பதிலளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் அவர் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் என்பதால் நிச்சயம் காவிரி குறித்த தகவல்களை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.