ஒரேநாளில் 29 மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் முற்றுகை- பிரதமர் மோடி அடுத்த மாதம் வருகை!!
சென்னை: மத்திய அமைச்சர்கள் 29 பேர் வரும் 9-ந் தேதியன்று தமிழகத்தில் முகாமிட உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளதாவது:
மக்களிடம் குறைகளைக் கேட்டறிவதற்கு மத்திய அமைச்சர்கள் வரும் 9-ந் தேதி தமிழகத்துக்கு வர உள்ளனர். இதில் வெங்கையா நாயுடு, ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ்வர்தன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 29 மத்திய அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல குஜராத் முதல்வர் ஆனந்தி பென், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார் ஆகிய 3 மாநில முதல்வர்களும் வர உள்ளனர். தமிழகத்தின் 32 மாவட்டங்களுக்கும் செல்லும் இவர்கள் மக்களை நேரில் சந்தித்து மனுக்களைப் பெற உள்ளனர்.
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் ஒரே நாளில் தமிழகத்துக்கு வருகை தருவது, வேறு எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத வாய்ப்பாகும். பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து அந்தந்த துறை அமைச்சரிடம்தான் மனுக்களை அளிக்க வேண்டும் என்றில்லை. பிற துறை அமைச்சரிடமும் மனுக்களை அளிக்கலாம். அந்த மனுக்களும் உரிய வகையில் பரிசீலிக்கப்படும்.
அதேபோல, பிரதமர் நரேந்திர மோடியும் வரும் ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு வர உள்ளார். அவர் வரும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறு தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.