டெல்லியின் நேரடி பிடியில் தமிழக அரசு-நிதித்துறை செயலாளராக பிரதமர் அலுவலக அதிகாரி சோமநாதன் நியமனம்!
பிரதமர் அலுவல அதிகாரியாக இருந்த சோமநாதன், தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழக அரசு அடுத்தடுத்து நேரடியாக டெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் சென்று கொண்டே இருக்கிறது. தற்போது தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக இருந்த சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்புக்குப் பின்னால் இருந்த தளபதிகளில் ஒருவர் சோமநாதனும் ஒருவர். இதனால்தான் சென்னையில் நடைபெற்ற சோமநாதன் இல்லத் திருமணத்துக்கு பிரதமர் மோடி நேரடியாக வந்திருந்தார்.
அப்போதிருந்தே தமிழக அரசில் சோமநாதனுக்கு முக்கியப் பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநரின் ஆலோசகராக சோமநாதன் நியமிக்கப்படுவார் எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் தமிழக அரசின் திட்டத்துறை செயலாளாராக சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழக ஆளுநர், அரசு நிர்வாகத்தில் மூக்கை நுழைத்து குடைச்சல் கொடுக்கத் தொடங்கிவிட்டார்.
தமிழக அமைச்சர்களும், ஆளுநர் செய்வது எல்லாமே சரி என நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து கிடக்கிறார்கள்; இப்போது பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமான அதிகாரி என வெளிப்படையாகவே தெரிந்த சோமநாதன், திட்ட செயலாளராகி இருக்கிறார்.
அவ்வளவுதான் ஒட்டுமொத்த தமிழக அரசும் இனி சோமநாதனின் சுண்டுவிரல் அசைவுக்குத்தான் காத்திருக்கப் போகிறது... டெல்லியில் நேரடி கண்காணிப்பில்தான் இனி தமிழக அரசு இயங்கும்!