திருவனந்தபுரத்தில் மார்ச் 14ல் 2 நாள் கருத்தரங்கம்.. கூடங்குளம் போராட்டக் குழு ஏற்பாடு
இடிந்தகரை: கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனை அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர்.
மக்கள் இயக்கம், அணு ஆயுதங்களுக்கு எதிரான அமைதிக் கூட்டணி, கேரள சாலிடாரிட்டி கமிட்டி ஆகியவை இணைந்து திருவனந்தபுரத்தில் மார்ச் 14ம் தேதி 2 நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன. அதில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களை அழைத்து கூடங்குளம் போராட்டம் தொடர்பாக விவாதிக்கவுள்ளனர்.
இரு மாநில மக்களின் பாதுகாப்பு குறித்தும் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படவுள்ளதாம். இதுதொடர்பாக இரு மாநிலங்களையும் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்கள்.
இந்தக் குழுவில் கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயக்குமார், தேசிய மின்பீடி தொழிலாளர் அமைப்பின் செயலாளர் டி.பீட்டர், கேரள சாலிடாரிட்டி கமிட்டியின் கூடங்குளம் போராட்டக் குழு கன்வீனர் சுப்ரமணியன், கேரள சுதந்திர மால்ஸ்யா தொழிலாளி பெடரேஷன் மாநிலச் செயலாளர் மகலீன் பீட்டர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் கேரளாவில் முகாமிட்டு பல்வேறு தலைவர்களையும் சந்தித்து வருகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், கேரள காங்கிரஸ் மணி தலைவர் பி.சி.ஜார்ஜ், கேரள காங்கிரஸ் துணைத் தலைவர் சதீஷன், ஜனதாதள தலைவர்கள் நீலலோகிததாசன், ஜெமீலா பிரபாகரன், ஐக்கிய ஜனதாதள தலைவர் வர்கீஸ் ஜார்ஜ், ஆம் ஆத்மி தலைவர் நீலகண்டன், சுசி தலைவர் வேணுகோபால், பிடிபி தலைவர் சபு கொட்டாரக்கரா உள்ளிட்ட பலரை சந்தித்துப் பேசியுள்ளனர்.
கூடங்குளம் அணு மின் நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து தலைவர்களுடன் இக்குழு ஆலோசித்தது. மேலும் நாட்டில் அதிக அளவில் அணு மின் உலைகள் நிறுவப்பட்டு வருவது குறித்தும் இக்குழுவினர் தலைவர்களிடம் கவலை தெரிவித்தனர்.
மேலும் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் கொண்டு வரப்படுவது குறித்தும் இக்குழு தலைவர்களிடம் கவலை தெரிவித்தது. இந்தப் பிரச்சினைகள் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து திருவனந்தபுரம் கருத்தரங்கில் விவாதிக்கப்படவுள்ளதாகவும், அதில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தலைவர்களுக்கு இக்குழுவினர் அழைப்பு விடுத்தனர்.