பாமகவுக்கு மீண்டும் கிடைத்தது "மாம்பழம்"
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சிக்கு மீண்டும் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர்களில் ஒருவரான ஜி.கே.மணி தெரிவித்தார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை ஜி.கே.மணி இன்று சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் ஜி.கே.மணி கூறியதாவது: அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளேன்.
மேலும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். கிராமங்களிலும் தேர்தல் கூட்டம் நடத்த அனைத்து கட்சிக்கும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளேன்.
பாமகவுக்கு பழையபடி, மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து, பாஜகவோடு தற்போது எந்த பேச்சு வார்த்தையையும் நடத்தவில்லை. இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்தார்.