மோடி அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- ராமதாஸ் அறிவிப்பு
சென்னை: மோடி அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு எதிராக பாமக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
நிலங்களை கையகப்படுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அவசரச் சட்டம் காலாவதியாக உள்ள நிலையில், அதற்கு பதிலாக புதிய சட்டத்திருத்த முன்வடிவை பாராளுமன்றத்தில் கடந்த 24-ந் தேதி மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. இது விவசாயிகளின் குரல்வளையை நெறித்து அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும். இதை பா.ம.க. கடுமையாக கண்டிக்கிறது.
இப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திருத்த மசோதா மிகவும் ஆபத்தானது என்பதால், அதை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இதை வலியுறுத்தி வரும் மார்ச் மாதம் 3-ந் தேதி செவ்வாய்க்கிழமை பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் வட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும். அப்போராட்டத்தில் நானும், பா.ம.க.வின் மூத்த தலைவர்களும் பங்கேற்போம்.
-இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.