காவிரி பிரச்சனை.. ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தது பாமக
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்துள்ளது பாமக.
சென்னை: நாட்டின் 14-ஆவது ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் 4,896 எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களித்து வருகின்றனர்
அதற்காக நாடாளுமன்றத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு பிரதமர் மோடி, பாஜக அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், எம்பிக்கள் வாக்களித்தனர்.
அதே போன்று தமிழகத்தில் சட்டசபை வளாகத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு முதல்வர் பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வாக்களித்தனர்.
இந்நிலையில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவில்லை. அக்கட்சியில் உள்ள ஒரே ஒரு எம்பியான அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்துள்ளார்.
இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முன்னதாக செய்தியாளர்களிடம் அறிவித்திருந்தார். அந்த வகையில், இன்று அன்புமணி ராமதாஸ் தேர்தலில் வாக்களிக்கவில்லை.